// print_r($new['title']); ?>
day, 00 month 0000

பேயாட்டம், சூதாட்டம், போராட்டம், களியாட்டம்….

ச. வி. கிருபாகரன்

இலங்கைத்தீவின் சுதந்திரத்தை தொடர்ந்து நடைபெற்ற அரசியல், பொருளாதார, சமூக, கலை கலாசார சம்பவங்கள்-  நிகழ்வுகளை நாம் மிகவும் அவதானமாக ஆராய்வோமானால், அவை பேயாட்டம், சூதாட்டம், போராட்டம், களியாட்டம்... என்ற அடிப்படையிலேயே கடந்த ஏழுபத்து ஐந்து வருடங்களாக நகர்ந்துள்ளதை அவதானிக்க முடியும்.

இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் எந்த தமிழன் எங்கு வாழ்ந்தாலும், அவர்களுடைய வாழ்க்கை, பங்களிப்பு சரித்திரம் மிக சுருங்கிய சில தசாப்தங்களே.ஆனால் இந்த  பூமியில் தமிழ் மொழி கலை கலாசாரம் என்பது பல ஆயிரம் ஆண்டுகள் அல்ல.“கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு மூத்த தமிழ்”.இதில் இலங்கைத் தீவில் தமிழர் தாயக பூமியான வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களின் சரித்திரம் பல ஆயிரம் ஆண்டுகளிற்கு மேலானது.இவ் அடிப்படையில் நாம் சில யதார்த்தங்களை ஆராய கடமைப்பட்டுள்ளோம்.

ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை செயற்பாடுகள் மட்டுமல்லாது, அடிப்படை உரிமைகள் பறிபோய் தமது சுயநிர்ணயத்திற்காக போராடும் மாற்று இன மக்களின் விடுதலை இயக்கங்களுடன் பயணித்தவன், இன்றும் பயணிப்பவன் என்ற அடிப்படையில், கடந்த முப்பத்து மூன்று ஆண்டுகளாக (33) – எமது அமைப்பின் மனுக்கள், எனது ஆங்கில தமிழ் கட்டுரைகள் யாவும் தமிழ் மக்களிற்கு மட்டுமல்லாது, பௌத்த சிங்கள மக்களிற்கும் படிப்பினையாக சில விடயங்களை எழுதி வருகிறேன்.  
 

இந்த அடிப்படையில் எனது ஆங்கில கட்டுரைகள் பிரதானமாக சிங்கள சகோதரர்களினால் நடத்தப்படும் அச்சு ஊடகம், இணையத் தளங்களிலேயே அன்றும் இன்றும் பிரசுரமாகி வருகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எனது ஆங்கில கட்டுரைகளை படிக்கும் தீவிரவாத சிங்கள பௌத்தர்  சிலர் என்மீது மிக கோபம் கொண்டு - இவர் தமிழீழ விடுதலை புலியின் ஆள், அவர்களது பணத்தில் பயணிக்கிறார், அவர்களது சர்வதேச பேச்சாளர் என பிரசாரம் செய்தார்கள். என்னை பொறுத்தவரையில் இவை யாவும்  சர்வசாதாரணமான விடயம்.இதற்காக “காகம் திட்டி மாடு சாகப்போவதில்லை”.அவர்களிற்கு என்னால் என்றும் கூறப்படும் மிக சுருக்கமான பதில் - ஆங்கிலத்தில, “Dog barks but the caravan moves on”.தமிழில் கூறுவதானால், “நாய்கள் ஊழையிட்டாலும் வண்டி நகர்ந்து கொண்டேயிருக்கும்” என்பதாகும்.
 
பேயாட்டம்

நிற்க, பேயாட்டம் என்பதை அன்றிலிருந்து நாம் இலங்கைத் தீவின் பௌத்த-சிங்கள அரசுகளின் மாறுபட்ட ஆட்சியை மனதில் கொள்ளலாம்.1948ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது முதல் நடைபெற்ற நிகழ்வுகளை நாம் வரிசைப்படுத்தும் பொழுது, சிங்கள- பௌத்த அரசுகள் செய்வது யாவும், வடக்கு, கிழக்கு வாழ் மக்கள், மலையக மக்களிற்கு மட்டுமல்லாது, தெற்கில் வாழும் சிங்கள மக்களிற்கு நடைபெறுவது யாவற்றையும் ஓர் பேயாட்டத்திற்கு ஒப்பிடலாம்.சில உதாரணங்களை இங்கு தருகிறேன்.

இலங்கைத் தீவின் சுதந்திரத்தை தொடர்ந்து, மலையக தமிழர்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டதுடன், வாக்குரிமையும் பறிக்கப்பட்டது.1949ம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் பிரஜாவுரிமை மசோதா பாராளுமன்றத்தில் வாக்களிக்கப்பட்ட பொழுது, அவ்வேளையில் அரசாங்கத்தில் அமைச்சராக திகழ்ந்த, இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகரான ஜி.ஜி.பொன்னம்பலம் சிங்கள அரசுடன் இணைந்து அந்த மசோதாவிற்கு சார்பாக வாக்களித்தார் என்பது சரித்திரம்.  

1948-50 களில் தமிழர் தாயக பூமியில் சிங்கள குடியேற்றங்கள் ஆரம்பமாகியது.1956ல் தனிச் சிங்கள மொழி சட்டம் அமுலாக்கப்பட்டது.தமிழரசு கட்சி தலைவர்கள் பௌத்த-சிங்கள அரசியல் தலைவர்களின் ஏவுதலில்  கொழும்பில் பழைய பாராளுமன்றத்தின் முன்பு, காலிமுகத்  திடலில் சிங்கள குண்டர்களினால் தாக்கப்பட்டார்கள்.1958ல் நாடு பூராகவும் தமிழ் மக்கள் மீதான இனக்கலவரம்.  

1959 இலங்கைத் தீவின் பிரதமர் பண்டாரநாயக்க புத்த பிக்குவினால் கொலை செய்யப்பட்டார்.1961ல் நாடு பூராகவும் தமிழ் மக்கள் மீதான இனக்கலவரம்.1964ம் ஆண்டு சிறிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தம் கைச்சாத்தாகியதை தொடர்ந்து, பல சதாப்தங்களாக சந்ததியாக மலையகத்தில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள்.  

1967ல் ஜே.வி.பி.யின் ஆரம்பம், 1971ல் இவர்கள் ஆயுதம் ஏந்தி அரசாங்கத்தை கைப்பற்றுவதற்கான முயற்சி, தோல்வி அடைந்ததுடன், நூற்றுக்கணக்கான சிங்கள இளைஞர்கள் கொலை செய்யப்பட்டதுடன், சிங்கள இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

1972ல் இலங்கை சிறிலங்கா குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டு பௌத்த மதம் சிறிலங்காவின் தலையாய மதமாக குடியரசு யாப்பில் பிரகடனப்படுத்ப்பட்டது.

இதே ஆண்டு தமிழ் மாணவர்கள், பல்கலைக்கழகம் செல்வதை தடுப்பதற்காக, பௌத்த-சிங்கள அரசினால் கல்வியில் தரப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்டது.இதே ஆண்டு தமிழ் இளைஞர்களினால்‘புதிய புலிகள்’ என்ற அமைப்பு, தமிழர்களின் பாதுகாப்பிற்காக ஆரம்பிக்கப்பட்டது.  

1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஒன்பது தமிழர்கள் சிங்கள பொலிசாரினால் கொல்லப்பட்டனர்.1977ம் ஆண்டு நாடு பூராகவும் தமிழ் மக்கள் மீதான இனக்கலவரம்.  

1978 ம் ஆண்டு உருவான புதிய அரசியல் யாப்பிற்கு அமைய சிறிலங்கா – ஜனநாயக சோசலிச குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டதுடன், சிறிலங்காவில் நிறைவேற்று ஜனாதிபதி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.  

1979ம் ஆண்டு சிறிலங்காவில் பயங்கரவாதச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, வடக்கு,கிழக்கில் பெரும் தொகையான தமிழ் இளைஞர்கள் அரச படைகளினால் படுகொலை செய்யப்பட்டதுடன், பெரும் தொகையான இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.இதே ஆண்டு நாடு பூராகவும் தமிழ் மக்கள் மீதான இனக்கலவரம்.  

1981ம் ஆண்டு நாடு பூராகவும் தமிழ் மக்கள் மீதான இனக்கலவரமும், யாழ்.பொது நூலகம் சிங்கள படைகளினால் தீக்கிரையாக்கப்பட்டது.1982ல் சிங்கள குடியேற்றம் தீவிரப்படுத்தப்பட்டது.  

1983ம் ஆண்டு  நாடு பூராகவும் தமிழ் மக்கள் மீதான மிக மோசமான இனக்கலவரம். இதேவேளை தமிழ் மக்கள் பிரிவினை கோர முடியாதவாறு ஆறாவது திருத்த சட்டம் சிறிலங்கா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அவ்வேளையில், கொழும்பு வெலிக்கடை சிறையிலிருந்து 53 தமிழ் கைதிகள், அரசாங்கத்தின் தூண்டுதலினால் சிங்கள கைதிகளினால் சிறையினுள் படுகொலை செய்யப்பட்டனர்.

மீண்டும் தெற்கில் 1985-19889 வரை நடைபெற்ற சிங்கள புரட்சிக்காரர்களான ஜே.வி.யி.னால் நடத்தப்பட்ட கொலை, கொள்ளை இரத்த ஆறு ஓடிய போராட்டங்களும், அதற்கான சிங்கள-பௌத்த அரசின் மிருகத்தனமான அணுகுமுறைகளும் மறக்க முடியாதவை.

ஒவ்வொரு தமிழ் மக்கள் மீதான இனக்கலவரங்களிலும், ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும் கோடிக்கணக்கான அவர்கள் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டும் சூறையாடப்பட்டன.
 
சூதாட்டம்

வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் தலைவர்களுடன் கொழும்பு வாழ் தமிழ் தலைவர்களும் இணைந்து நடத்திய - வடக்கு கிழக்கு வாழ் மக்களிற்கான அரசியல் உரிமை போராட்டம், சாத்வீகம் என்ற அடிப்படையில் 1948ம் ஆண்டு முதல் ஏறக்குறைய முப்பது வருடங்களாக நடத்தப்பட்டு, மாறுபட்ட சிங்கள பௌத்த அரசுகளினால் தொடர்ச்சியாக நசுக்கப்பட்டதுடன், தமிழ் அரச உத்தியோகத்தர் சிங்களம் கற்றால் தான் அவர்களிற்கு சம்பள உயர்வு- வேலை உயர்வு என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.

1957ல் பண்டா- செல்வா ஒப்பந்தம், வடக்கு, கிழக்கிற்கு சமஷ்டி முறையை நோக்கிய அரசியல் தீர்வு கைச்சாத்தாகியதும் சிங்கள-பௌத்த அரசியல்வாதிகள் புத்த பிக்குமார்களின் எதிர்ப்புகளினால் உடன்  எதேச்சையாக பண்டாரநாயக்கவினால் கிழித்து எறியப்பட்டது என்பதும் சரித்திரம்.

1961ம் ஆண்டு தமிழரசு கட்சியினால் யாழ் கச்சேரிக்கு முன்னால் சாத்வீக போராட்டமான சத்தியா கிரகத்தை மேற்கொண்ட வேளையில், சிறிலங்கா இராணுவத்தினர் அவர்கள் மீது குட்டாம் தடி பிரயோகம் செய்து அவர்களை அடித்து உதைத்து கைது செய்து தெற்கில் பனாகொடை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டார்கள்.  

1965 ல் டட்ளி-செல்வா ஒப்பந்தங்கள் வடக்கு கிழக்கிற்கு சமஷ்டி முறையை நோக்கிய அரசியல் தீர்வு கைச்சாத்தாகியதுடன் இதுவும் சிங்கள-பௌத்த அரசவாதிகள், புத்த பிக்குமார்களின் எதிர்ப்புகளினால் உடன் ஏதேச்சையாக டட்ளியினால் கிழித்து எறியப்பட்டது என்பதும் சரித்திரம்.

1972ல் தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம், மலையக தமிழர் சார்பில் தொண்டமான் ஆகியோரினால் தமிழர் ஐக்கிய கூட்டணி உருவாக்கம்.  

1976ம் ஆண்டு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் உதயமும் வட்டுக்கோட்டை தீர்மானமும்.  

1977ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழீழ கோரிக்கையை முன்வைத்து தேர்தலில் நின்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி வடக்கு, கிழக்கில் அமோக வெற்றியை பெற்று தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையான தனி நாட்டு கோரிக்கைக்கான ஆதரவை ஜனநாயக வாக்கெடுப்பில் நிரூபித்தனர்.

1984ம் ஆண்டு திம்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்து பலனற்ற பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.இதேவேளை வடக்கு, கிழக்கில் - இராணுவ அடக்கு முறைகளினால் பல நூற்றுக்கணக்கான படுகொலைகளும், கைதுகள்- சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள், சொத்து அழிவுகள் அரச படைகளின் அட்டூழியங்கள் தொடர்ந்தன.
 
 போராட்டம்

1972ம் ஆண்டு தமிழ் இளைஞர்களினால் ‘புதிய புலிகள்’ என்ற இளைஞர்களது அமைப்பு தமிழர்களின் பாதுகாப்பை தலையாய கடமையாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.1975ல் இவ் அமைப்பு தமிழீழ விடுதலை புலிகளென பெயர் மாற்றப்பட்டு, தமிழ் மக்களின் வெளிவாரியான சுயநிர்ணயத்தை அடைவதற்கான ஆயுத போராட்டமாக வடிவம் பெற்றது.  

1984ம் ஆண்டு தமிழீழத்திற்கான முதலாவது யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது.1985ம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகள் யாழ் வளைகுடாவில் பெரும்பான்மையான பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.1987ம் ஆண்டு  யாழ் வளைகுடாவிற்கான பொருளாதார தடை சிறிலங்கா அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது,

இதனை தொடர்ந்து தமிழீழ விடுதலை புலிகளினால் ‘சுதுமலை பிரகடனம்’ நிறைவேற்றப்பட்டது.இதேவேளை, வடக்கு கிழக்கிற்கு இந்திய இராணுவத்தின் வருகையும், இதே ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கான யுத்தம் ஆரம்பமாகியது.  

இந்திய இராணுவத்தினால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், அவர்களது சொத்துகளும் இவர்களினால் சூறையாடப்பட்டது.

இறுதியாக 1990ம் ஆண்டு இந்திய இராணுவம் சிறிலங்காவிலிருந்து திரும்பி சென்றதை தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் வரை, அதாவது 2009ம் ஆண்டு மே மாதம் வரை, விடுதலை புலிகள் ஓர் நடைமுறை அரசை (de-facto) சகல கட்டமைப்புகளுடனும் சிறிலங்கா அரசிற்கு நிகராக வெற்றியாக நடத்தினார்கள் என்பது உலகம் அறிந்த உண்மை.
 
 களியாட்டம்

துர்அதிஷ்டவசமாக முழு உலகமே பௌத்த-சிங்கள வாதிகளின் பொய்யும் புரட்டும் கற்பனை கதைகளை நம்பி, தமிழீழ விடுதலை புலிகளை அழிப்பதற்கு முன்வந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.இதில் விசேடமாக இந்திய காங்கிரஸ் அரசின் பழிவாங்கல் படலம் தமிழீழ விடுதலை புலிகள் மீது மிகவும் வெற்றியாக நிறைவேறியது.

அன்று முதல் இன்றுவரை வடக்கு, கிழக்கு மட்டுமல்லாது, புலம்பெயர் தேசத்திலும் தமிழீழ மக்கள் சார்பாக நடைபெறுபவற்றில் எண்பது சதவீதமானவை (80%)  நிச்சயம் களியாட்டம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

முதலில் வடக்கு, கிழக்கில் அரசியல்வாதிகள்- தேர்தல்வாதிகளின் அட்டகாசம் ஒரு பக்கம், மறுபக்கம் 1995ம் ஆண்டின் பின்னர் ஜனாதிபதி சந்திரிக்காவின் மாமனாரான அன்றைய பாதுகாப்பு செயலாளர் ரத்வத்தையினால்,யாழ் வளைகுடா இளைஞரிடையே அறிமுகப்படுத்தப்பட்ட போதைவஸ்து பாவனை இன்னுமொரு புறம்.இத்துடன் சாதி மத பேதங்கள் - கள்ள காணிகள் கள்ள உறுதிகள் இன்னுமொரு தலையிடி.ஒட்டுமொத்தமாக கலாசார சீர்கேடு, அங்கங்கே பௌத்த தேவாலயங்கள், சிங்கள குடியேற்றங்களின் வரவும், சிறிலங்கா இராணுவமும், புலனாய்வு பிரிவினரும் இணைந்து வடக்கு, கிழக்கு வாழ் மக்களை தலைநிமிர முடியாது ஒடுக்கி-ஒதுக்கி வைத்துள்ளனர்.

புலம்பெயர் தேசத்தில், ‘A’லிருந்து ‘Z’வரை, ‘தமிழ்’ என்ற சொல்லுடன் இணைத்து பின்ணனி ஆணி வேரை கண்டுபிடிக்க முடியாத நூற்றுக்கணக்கான சங்கங்கள், அமைப்புக்கள் புதிது புதிதாக உதயமாகியுள்ளன.யாவரிடமும் பிளவுகள்- கோபதாபங்கள் என்பது சர்வசாதாரணமாகியுள்ளது. யாரிடமேனும் பிளவுகள்-கோபதாபங்கள் இல்லையென்றால், அது நிச்சயம் அதிசயமாக பார்க்க வேண்டி நிலையில் உள்ளோம்.  

மாவீரர் தினம் தவிர்ந்த மற்றைய அரசியல் நிகழ்வுகளில்  மக்கள் பங்களிப்பு குறைந்தே காணப்படுகிறது.இதற்கான முக்கிய காரணியாக -  சிறிலங்கா, இந்தியா, வெளிநாட்டு புலனாய்விற்கு வேலை செய்பவர்களின் நசுக்கான வேலை திட்டங்கள் வெற்றியாக நிறைவேறுகிறது.சுருக்கமாக சொல்வதானால் ‘பிரித்து ஆளுவதற்கான’ கங்கரியங்கள் புலம்பெயர் தேசத்திலும் வடக்கு கிழக்கிலும் வெற்றி நடைபோடுகின்றன.

இதற்குள் பல நாடுகளில் பெரும் தொகையான தமிழர்கள், ஒழுங்கான வதிவிட அனுமதியில்லாது வாழும் தொகை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.இவ் நாடுகள் சிறிலங்கா அரசிற்கு ஆயுத- பண உதவி செய்யாவிடில், நாம் யாவரும் எமக்கான நாட்டை பெற்று அன்றே எமது நாட்டில் நிம்மதியாக வாழ்ந்திருப்போம்.இவ் நாடுகளிற்கு இவர்கள் ஏன் வர விரும்பினார்கள் என்பது பற்றி சிந்திப்பது உண்டா? எமது வடக்கு கிழக்கில் - “நீர் வளம் உண்டு, நில வளமுண்டு, நிம்மதி ஒன்றுதான் இல்லை”.

  திரு பழ நெடுமறன்

கடந்த திங்கட்கிழமை தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும் ஈழத்தமிழர்களின் மதிப்பையும் நெருங்கிய உறவுகளையும் கொண்ட திரு பழநெடுமறன் அவர்கள், விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார், கூடிய விரைவில் வெளிவருவார் என்ற அறிவித்தல் ஒருபுறம், இதேவேளை புலம்பெயர் தேசங்களில் மிக அண்மையில் வெளியாகிய செய்திகள் மறுபுறம் காணப்படுகின்றன.மிக நீண்டகாலமாக ஆய்வுக் கட்டுரைகள் எழுதுபவன் என்ற அடிப்படையில், இவை பற்றி 2016 ம் ஆண்டில் ஏற்கனவே என்னால் சில கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.  

இதில் குறிப்பாக இந்தியாவின் இளைப்பாறிய முன்னாள் கடற்படை அதிகாரியும் பேராசிரியருமான காகில் சுப்பிரமணியம் அவர்கள், கொழும்பிற்கு விஜயம் செய்த வேளையில், 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் திகதி கொழும்பு ஆங்கில அச்சு ஊடகம் ஒன்றிற்கு கொடுத்த செவ்வியில் -“சிறிலங்கா தொலைக்காட்சியில் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலென காண்பிக்கப்பட்ட உடல் அவரது உடலாக இருக்க முடியாதுவென கூறியிருந்ததுடன், இவர்கள் கூறுவது போல் பிரபாகரன் தன்னைத் தானே சுடுவதற்கான ஆதாரம் இருக்கவில்லையென்றும், அப்படியாக நடந்திருந்தால், நிச்சயம் ‘மரபு அணுகூறு’ (DNA)யும் கைவிரல் அடையாளங்களும் கிடைக்க பெற்றிருக்கும்” எனவும் கூறியுள்ளார்.

இதற்காக அவரினால் குறிப்பிடப்பட்ட இரு காரணங்களாவன;   ஒன்று இந்தியாவிற்கு இதுவரையில் அவர் இறந்ததாக எந்தவித ‘மரண சான்றிதளும்’ சிறிலங்காவினால் கொடுக்கப்படவில்லையெனவும், சிறிலங்காவினால் இந்தியாவிற்கு கொடுக்கப்பட்ட அறிக்கை  சட்ட மா அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் ‘இவர் இறந்ததாக கருதப்படுவதாகவே’ கொடுத்திருந்தார்கள் என்பதுடன், சிறிலங்காவிலோ இந்தியாவிலோ இவர் பற்றிய எந்தவித ‘மரபு அணுகூறு’ (DNA)யும் செய்யப்படவில்லை என்பதோடு, இவரது கைவிரல் அடையாளங்களும் ஆராயப்படவில்லை என்று கூறியிருந்தார்.

பேராசிரியர் சுப்பிரமணியம் அவர்களின் கூற்றுக்கு அடங்க, இந்தியாவிற்கு சிறிலங்காவினால் வழங்கப்பட்ட அறிக்கை பின்வருமாறு கூறுகிறது. “புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009 மே 17 அன்று நந்திக்கடலில் உள்ள முள்ளிவாய்க்காலில் நான்காம் ஈழப் போரின் இறுதி நாளில் கொல்லப்பட்டதாகக் கருதப்படுகிறது.மேலும் அவர் உயிருடன் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை, எனவே அவர் நீதித்துறை ரீதியாக இறந்துவிட்டதாக கருதப்படுகிறது”.

இவ் அறிக்கையில் பிரபாகரன் 2009ம் ஆண்டு மே 17ம் திகதி  இறந்ததாக கூறப்பட்டாலும், இவரது இறப்பு மே 19ம் திகதியே உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதாக பேராசிரியர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் என்னால் எழுதப்பட்ட தமிழ் ஆங்கில கட்டுரைகளில் - அப்படியானால், பேராசிரியர் காகில் சுப்பிரமணியத்தின் கூற்றுக்கு, சிறிலங்கா அரசாங்கம், பாதுகாப்பு அமைச்சு, கோத்தபாய, மகிந்தா, சரத் பொன்சேக்கா போன்றவர்கள் அன்று பேராசிரியர் சுப்பிரமணியத்தின் செவ்விக்கு, அதுவும் கொழும்பு பத்திரிகையில் வெளியான விடயத்திற்கு, எதற்காக மறுப்பு அறிக்கை வெளியிட முன்வரவில்லையென கேள்வி எழுப்பியிருந்தேன். 
 
ஆனால் தற்பொழுது, திரு பழ நெடுமறன் அவர்களது கூற்றுக்கு பின்னர், சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் திடீரென தம்மிடம் ‘மரபு அணுகூறு’ (DNA) இருப்பதாக கூறுவது வியப்பிற்குரிய விடயம்.

புரியாத புதிராகவுள்ளது

இந்த சமாச்சாரம் இப்படியாக இருக்க - இச் செய்தியின் பின்னர், சிறிலங்காவின் பாதுகாப்பு படைகளிற்கு மேலாக, பதற்றம் கொண்டு அவசரம் அவசரமாக அறிக்கை வெளியிடுவார்கள் யார் என்று பார்த்தால், அது பெரும்பாலும் புலம்பெயர் வாழ் தமிழர்களாகவே காணப்படுகிறார்கள்.இது புரியாத புதிராக உள்ளது!  

ஒன்றில் தலைவர் பிரபாகரன் இறந்ததற்கு இவர்களிடம் தகுந்த ஆதாரம் இருக்க வேண்டும்,இல்லையேல் அறிக்கை விடுபவர்களுக்கு அவருடன் நல்ல தொடர்பு இருக்க வேண்டும்.

இன்று நடைபெறும் களியாட்டங்களில் - அவர்களது சொத்துக்கள், நிதிகள், போலி முகவரி அச்சிடப்பட்ட அஞ்சல் தலைப்பில் (Letterhead) போலி கடிதங்கள், அவர்களது போராட்ட ரகசியங்களை பொதுவெளியில் பிரசுரித்ததுடன், சில முக்கிய போராளிகளை அவமானப்படுத்தியவர்கள், திரிபுபட்ட சரித்திரம், கருத்துக்களை, அறிக்கைகளை, கற்பனை கதைகளை, விடுகதைகள், கட்டுரை போன்றவற்றை வரம்பு மீறி செய்யும் போலி பெயர்வழிகள் கடந்த பதின் மூன்று வருடங்களாக பலவிதப்பட்ட சுகபோகங்களை அனுபவிக்கிறார்கள் என்பது யாவரும் அறிந்ததே.  
அவர்களின் பெயரை சொல்லி பத்திரிகைகளிலும் இணைய தளங்களிலும் மற்றவர்களை வருடக்கணக்காக மிரட்டியவர்கள், நெடுமாறன் ஐயா கூறிய விடயத்தை, சிறிலங்காவில் உள்ள பத்திரிகைகள் வெளியிட்டுள்ள பொழுதும், இவர்கள் இருட்டடிப்பு செய்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
 
இப்படியான நிலையில், பேராசிரியர் காகில் சுப்பிரமணியத்தின் ஆதார ஆக்கபூர்வமான கேள்விகள், அத்துடன் நெடுமாறன் ஐயாவின் அறிவிப்பு இவர்கள் போன்றவர்களிற்கு ஆறுதலை கொடுக்குமா? அல்லது தொல்லைகளை கொடுக்குமா? என்பதே இன்றைய கேள்வி.  

பௌத்த-சிங்கள அரசினால் 2009ம் ஆண்டு மே மாதம், தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் இறந்து விட்டாரென கூறும் பொழுது, எதையும் ஆராயாது அமைதியாக இருந்தவர்கள், இன்று அவர் இறக்கவில்லை, இருக்கிறார் என்று கூறும் பொழுது, எதற்காக மனம் உடைந்து கூத்தடிக்கிறார்கள்? எல்லாம் புரியாத புதிராகவுள்ளது!

அது யாராக இருந்தாலும் “உண்மைகளை கூறி உத்தமராக வாழ வேண்டும்”. தற்பொழுது பணம் என்ற விடயம் உண்மைகளிற்கு மேலால் முக்கிய பங்கு வகித்து மக்களிடையே மாபெரும் குழப்பங்களை அங்காங்கே உண்டு பண்ணுகிறது.இதை நேர்மையானவர்கள்-உண்மையானவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.ஒருவர் கடுமையாக- நேர்மையாக விசுவாசமாக உழைக்கும் பொழுது, பணம் தானாக அவர்களை தேடி வரும் என்பது உலக நியதி.

தமிழர்களது இன்றைய அரசியல் நிலையை ஆராய்வோமானால் - பௌத்த சிங்களவாதிகள், வெற்றியாக  நடைபெற்ற தமிழீழ போராட்டத்தையும், மிக நீண்டகாலமாக வடக்கு- கிழக்கின் பெரும் பகுதிகளில் திகழ்ந்த ‘தமிழீழ நடைமுறை அரசையும்’(de-facto) அறவே மறந்துள்ளனர். இதேவேளை, தமிழ் அரசியல்வாதிகளில் பெரும்பான்மையோர், சுயநல அரசியல் நடத்தி, தமிழீழ விடுதலை புலிகளின் போலி தலைவர்களாக மக்களிடையே திகழ முயற்சிக்கிறார்கள்.இவ் நிலையில், வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் இளைஞர் சமுதாயம் கொதி நிலையில் உள்ளனர்.இவை யாவும், வடக்கு-கிழக்கில் மீண்டும் ஓர் ஆயுத போராட்டத்திற்கு வித்திடப் போகிறதா என்று கேள்வி இங்கு எழுகிறது!  

சர்வதேசத்தை ஏமாற்றி சலுகைகளை பெற்ற பௌத்த-சிங்கள அரசுகள், இன்று சர்வதேசத்தில் செல்வாக்கு இழந்து காணப்படுகிறார்கள்.ஆகையால் இவர்கள் யாவரும் மிகவும் அவதானமாக சிந்திக்க வேண்டிய காலம் வந்துள்ளது போல் தென்படுகிறது.உலகம் மிக சிறியது, காலம் தான் இவற்றிற்கு பதில் சொல்ல வேண்டும்!


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்