// print_r($new['title']); ?>
day, 00 month 0000

"ரஜினிகாந்திடம் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்"

ரஜினிகாந்திடம் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு ட்வீட்டரில் தெரிவித்துள்ளார்.

விஜயவாடாவில் சமீபத்தில் நடைபெற்ற என்டி ராமராவ் 100வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார்.அப்போது தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்து பேசிய ரஜினிகாந்த், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஒரு தீர்க்கதரிசி. 2047 ஆம் ஆண்டு ஆந்திரா எப்படி இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் சந்திரபாபு நாயுடு செயல்பட்டு வருகிறார்.

சந்திரபாபு நாயுடுவின் தொலைநோக்கு திட்டங்களின் காரணமாக ஹைதராபாத் தற்போது நியூயார்க் நகரம் போல் அபிவிருத்தி அடைந்துள்ளது என்று கூறினார்.

ரஜினிகாந்தின் இந்த பேச்சுக்கு ஆந்திர அமைச்சர் ரோஜா, ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கோடாலி நாணி, மதுசூதன் ரெட்டி ஆகியோர் உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அவர்களில் சிலர் ரஜினிகாந்தை மிகவும் காட்டமாக விமர்சித்து பேட்டியளித்திருந்தனர்.

இந்த சம்பவம் தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருக்கும் ரஜினிகாந்த் ரசிகர்கள் இடையே பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த ரஜினிகாந்த் ரசிகர்கள் எங்களுடைய தலைநகரம் சென்னை, உங்களுடைய தலைநகரம் எது என்று கேள்வி எழுப்பி ஹேஸ்டேக் செய்திருந்தனர்.

இது தொடர்பாக தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில்: - என்.டி.ஆர் 100வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் அவருடைய கருத்துகள், அனுபவம் ஆகியவற்றை தெரிவித்து பேசினார்.

சமூகத்தில் மிகவும் கௌரவமான நிலையில் இருக்கும் ரஜினிகாந்தை ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்துள்ள விதம் அனைவருக்கும் வேதனை ஏற்படுத்தி உள்ளது.

ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி அரசின் மீது அவர் எந்தவிதமான குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை. அந்த கட்சியை சேர்ந்த யாரையும் குறிப்பிட்டு அன்று அவர் பேசவில்லை. பல விஷயங்களில் தன்னுடைய அனுபவம், அபிப்பிராயம் ஆகிவற்றை மட்டுமே அவர் தெரிவித்து பேசினார்.

இது போன்ற தேவையில்லாத விமர்சனங்களை தெலுங்கு மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். விமர்சித்தவர்களை மன்னிக்கவும் மாட்டார்கள். வாய் கொழுப்பு எடுத்து பேசும் தன்னுடைய கட்சி தலைவர்களை ஜெகன்மோகன் ரெட்டி கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி இந்த விஷயத்தில் நடைபெற்ற தவறுக்கு மன்னிப்பு கேட்டு தவறை சரி செய்து கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்