// print_r($new['title']); ?>
தமிழர்கள் உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும், தங்களுடன் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை சுமந்து செல்வதாக, பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் காமராஜ் லேன் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். இங்கு அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மேடையில், பாரம்பரிய நடனம், மேற்கத்திய நடனம் என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.
இதனிடையே, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி பாரம்பரிய பட்டு வேட்டி சட்டையில் வந்து அசத்தினார். அவரை எல்.முருகன், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் உண்மையிலேயே அற்புதமானது என தெரிவித்தார்.
மேலும், பேசிய அவர், ஜனநாயகத்தின் தாய் இந்தியா. இதன் ஜனநாயக அமைப்பு பற்றிய பல வரலாற்று குறிப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள உத்திரமேரூர் பகுதியில் 1100-1200 ஆண்டுகள் பழமையான ஒரு கல்வெட்டு இந்திய ஜனநாயக விழுமியங்களை பறைசாற்றுவதாக உள்ளன. அக்காலத்தில், இக்கல்வெட்டு ஒரு சிறிய அரசியலமைப்புச் சட்டம் போன்றது. கிராம சபையானது எவ்வாறு அமைக்கப்பட வேண்டும்? அதன் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை, தகுதிநீக்கத்திற்கான விதிமுறைகள்? என்பன போன்று விரிவாக பேசுகிறது.
மேலும், தமிழர்களும், தமிழ் கலாசாரமும் உலகத்தோடு இயற்கையாகவே ஒத்துப் போகக்கூடியவர்கள் என்றும், பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.